Friday, April 20, 2012

ட்விட்டர் புத்திஜீவிகளுக்கு சமர்ப்பணம் :



முதலில் ட்விட்டர் புத்திஜீவிகள் என்றால் யார்? எவ்வாறு அவர்களைக் கண்டுபிடிப்பது? நாம் அப்படி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

o    முதல் பாயின்ட். நீங்கள் எந்த தனிக் கீச்சுகளும் போடக் கூடாது. அதாவது one liner கீச்சுகள் என்றால் அவர்களுக்கு ஜென்ம விரோதம். அந்த விரோதத்தை வெளிப்படுத்த இம்மாதிரியான கீச்சுகளை தத்துவம், வ.பா, மொக்கை, கவிதை என்று பல்வேறு வகைப் படுத்தி திட்டிவிடுவார்கள்.

o    அடுத்தது.. ஏதாவது ஒரு நிகழ்வையோ தலைப்பையோ பின்புலமாக வைத்து பொதுவாக ட்வீட்ட வேண்டும். 
எ.கா: 'இப்பவே கண்ண கட்டுதே' , ' அடப்போங்க டா '
இப்படி ஒரு ட்வீட் போட வேண்டும். அது என்ன நிகழ்வு என்றெல்லாம் குறிப்பிடத் தேவை இல்லை. ஏனென்றால் ஃபாலோயர்கள் என்பவர்கள் மூடர்கள் தானே. 

o    அடுத்தது.. ஏதாவது ஒரு தளத்தில் உள்ள ஒரு பதிவைப் படித்துவிட்டு அங்கே போட வேண்டிய கமெண்ட்டை இங்கே வந்து ட்வீட்டாகப் போட வேண்டும். இதில் மிக முக்கியமான விஷயம்.. அதன் பின்னணியான பதிவின் சுட்டியை மட்டும் கொடுத்துவிடவே கூடாது. எதைப் பற்றி பேசுகிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டால் பின்பு நம்மை யார் புத்திஜீவி என்று ஒத்துக்கொள்வார்கள்?

o    அடுத்தது.. விவாதங்கள். டைம்லைனில் ஏகபோக விவாத வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கும். அதில் ஏதாவது ஒன்றில் ஏறி உங்கள் சேவையை நிறுவ வேண்டும்.

o    பல வண்டிகளில் பயணம் செய்தீர்களானால் மிகவும் சிறப்பு. அதும் ட்விட்டரில் விவாதங்கள் எவ்வளவு நேர்த்தியாக சிறப்பாகப் பயணிக்கும் என்பது நாம் அறிந்ததே. அந்தக் கொடூரத் தொனியை சிதைக்காமல் விவாதிக்க வேண்டும். 

o      அடுத்த முக்கியமான விஷயம் இலக்கியம். சாரு வீட்டு நாய்கள் இன்று புணர்ந்தன என்கிற செய்து தெரிந்தால் கூட அதனை வைத்து பெரிய விவாதம் நடத்தி தன் இலக்கிய ஈடுபாட்டைக் காட்ட வேண்டும். இலக்கிய ஈடுபாடு என்பது மிக மிக முக்கியம். இதுவும் முன்னே சொன்னது போல யாருக்கும் புரியாவிதம் அமைந்தால் சிறப்பு.

o    இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் .. இங்கே முக்கியமான, நாட்டைப் புரட்டிப் போடுகிற விஷயங்களை மட்டும் பேசி இந்தியாவை வல்லரசாக்குவேன் என்கிற பாணியில் போலி நாடகம் ஆடுவது. இந்த ஆட்டம் மிகவும் கவனமாகக் கையாள வேண்டியது. அப்படிக் கையாண்டால் மிகவும்  செளகர்யமானது.. 

எப்படிஎன்றால்.. யாரேனும் மிகவும் ரசிக்கும்படி ஒரு கீச்சு போட்டால் கூட.. எடுத்துக்காட்டுக்கு எனக்கு மிகவும் பிடித்த கீச்சுகள் இரண்டு குறிப்பிடுகிறேன் : 

@cheethaa வின் கீச்சு : 'அத்தனைக்கும் ஆசை. படு'. 
@araathu வின் கீச்சு : 'தேவதைக்கு வயதானால் வயதிற்கு வந்த பெண்ணாக மாறிவிடுகிறாள்'

இம்மாதிரியான கீச்சுகளை சுலபமாக மொக்கை என்று வகைப்படுத்தி விடலாம். நாம் தான் முக்கியமான விஷயங்களைப் அலசி நாட்டைப் புரட்டிப் போட இருக்கிறோமே.. அப்படியானால் இந்த ட்வீட் எல்லாம் மொக்கை தானே? நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது இவர்கள் எப்படி தேவதை, படு என்றெல்லாம் மொக்கைப் போடலாம்? நாட்டில் பேசுவதற்கு பிரச்சனைகளா இல்லை?. அதனால் இம்மாதிரியான கீச்சுகள் மொக்கைகள் தான். நமக்கு விவாதிக்க தலைப்பு இல்லையென்றால் கூட இவற்றினை மொக்கை என்று பேசி பொழுதைப் போக்கலாம். ஆனால் இம்மாதிரி கீச்சுகள் மட்டும் எழுதக் கூடாது. 
அப்பொழுது தான் புத்திஜீவிகள் ஆக முடியும்.


மேலே சொல்லப்பட்ட விதிகளை பின்பற்றி வரும் புத்திஜீவிகள் என் கீச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தவாறே இருந்தார்கள். அதாவது என்னுடைய பிரதானமான கீச்சுகள் கீழே குறிப்பிட்டுள்ள வகை : 

  • கேள்வி: ஆஸ்காருக்கு ரகுமான் தகுதியானவரா? பதில்: ஆஸ்காரின் தகுதியே அவ்வளவு தான்.
  • மதச் சாம்பிராணி.
  • நம் ஊரில் பஸ் கொளுத்துவது சுலபம். கண்ணீர் விடுவது தான் கடினம்.
  • கடவுள் மார்க் எல்லாம் நிறைய வாங்கிவிட்டார். Attendance தான் 0%.
  • வெற்றி-தோல்வி முக்கியமில்லை என்று வென்றவனிடம் யாரும் சொல்வதில்லை
  • கிடைத்த உடனே மாறிவிடுகிறது 'தேவை'
  • இது வெறும் ராக்கெட் சைன்ஸ் தான். பெண்ணின் மூளை அல்ல


உலகின் தலையாய பிரச்சனைகளுக்கு ட்விட்டரில் விடை தேடும் புத்திஜீவிகளின் கண்களுக்கு இவை எல்லாம் எப்படித் தெரியும்? மொக்கையாகத் தானே.
ஆஸ்கார், பெண், தோழி, கடவுள் போன்றவை எல்லாம் தேவையா? எனவே அவர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் இவற்றினை தத்துவம், மொக்கை, வ.பா என்று வகைப்படுத்தி எதிர்த்து தங்களுக்கேயான புத்திசாலி பட்டத்தை தக்கவைத்துக் கொள்வார்கள்.

சரி.. இவர்கள் பக்கம் என்ன நியாயம் தான் இருக்க முடியும் என்று அவர்கள் வழியில் சென்றுப் பார்த்தேன். அட.. எதிர்பார்த்தவாறு எதிர்ப்புகளே இல்லை. எவ்வளவு ஜாலியாக கீச்சுகளே போடாமல் வாழ முடிகிறதே... ஆச்சர்யம்..!

புத்திஜீவிகளிடம் இருந்து எதிர்ப்பே வராமல் இருப்பதற்கு எப்படிக் கீச்ச வேண்டும் என்று பார்க்கலாம். இதற்கு புத்திஜீவிகள் பாணியிலேயே ட்வீட் போட வேண்டும். அதாவது :


o    நாள் முழுக்க பல வண்டிகளில் ஏறி இறங்கி அரட்டை மட்டும் செய்ய வேண்டும். ஜி-டாக் உபயோகிப்பதை மறந்துவிட வேண்டும். அதான் ட்விட்டர் இருக்கிறதே. 

o    டீ குடிக்கிறேன், மழை பெய்கிறது என்று ஸ்டேடஸ் அப்டேட் போட வேண்டும்.

o    யாரோ ஒருவன் கேட்ட கேள்விக்கு அவனுக்கு பதிலளிக்காமல் பொதுவாக ட்வீட் போட வேண்டும். 

o    ஒரு நாளைக்கு நாலைந்து பேரை திட்ட வேண்டும். அதுவும் பெயர் குறிப்பிடாமல் பொதுவாகத் திட்ட வேண்டும். படித்துக் குழம்புது யார்? ஃபாலோயர்கள் தானே. அவர்களை மூடர்கள் ஆக்குவது தானே நம் வேலை.

o    எங்காவது எடுத்த புகைப்படத்தை பகிர வேண்டும்.

நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் பகிலராம், இணையத்தில் புரளும் காமெடிகள் பகிரலாம், கிரிக்கெட் மேட்ச் பார்த்து ட்விட்டரில் லைவ் கமெண்ட்ரி கொடுக்கலாம், எதிர்கீச்சு போடலாம், யாருக்கோ கீச்சு போடலாம்... ஆனால் கீச்சுகள் மட்டும் போடக் கூடாது. 

இப்படியும் ஒரு உலகமா என்று எனக்கு ஆச்சர்யமாகத் தான் இருந்தது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இதைத் தான் புத்திஜீவிக்கூட்டமும் பெரும்பாலும் செய்துகொண்டிருக்கிறது. சரி..இப்படி இருந்து பார்ப்போமே என்று இருந்தால், நினைத்து போலவே அதீத வரவேற்பு. ஆஹா.. இதுவல்லவா வரம் என்பதுபோலாகிவிட்டது. ட்வீட்டே போடாமல் நாள் முழுக்க உலா வரலாம். அதுமட்டுமல்ல அப்படிக் கீச்சுபவர்களையும் மடக்கிப் பிடித்து விளாசலாம். அவர்களை விமர்சித்து நாம் புத்திஜீவி ஆகிவிடலாம். என்ன ஒரு சுகம். 
புத்திஜீவிகள் மனம் வைத்தால் அவர்கள் சபையில் ஒரு சீட்டு கூட கிடைக்கும். நாளைக்கு மந்திரியா கூட ஆகலாம். 



Monday, October 3, 2011

புத்திசாலித்தனத்தின் முட்டாள்தனம்


பொதுவாகவே நான் ட்விட்டரில் அதிகம் விவாதங்களில் கலந்துகொள்ளாமல் தனிக் கீச்சுகள் மட்டும் எழுதி விலகி விடுவது வழக்கம். விவாதங்கள், சண்டைகள் போன்றவை மீது எனக்குள்ள அதீத வெறுப்பே காரணம்.. அது ஒரு பலவீனமும் கூட.

விஷயத்திற்கு வருகிறேன். இங்கே நடந்திருப்பது ஒரு விளையாட்டான(???) ஒன்று என்றாலும், இது பல குழப்பங்களை உண்டாக்குவதால், இதற்கு விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

கடந்த செப் 9 ஆம் தேதி ஒருவர் கீச்சியிருந்தது :

"புத்திசாலிகள் புத்திசாலிதனத்தை வெளிக்காட்டிக் கொண்டே இருக்க மாட்டார்கள் முட்டாள்கள் முட்டாள்தனத்தை காட்டிக்கொண்டே இருப்பது போல"

இந்த கிச்சை நான் படித்திருந்தேன். முக்கியமாக இதனைக் கீச்சியவருடன் இந்த கீச்சின் பொருளை வைத்தே சில கருத்து பரிமாற்றங்கள் நடந்தது. இதுவும் உண்மை.

நேற்று ( அக் 3) நான் இரண்டு கீச்சுக்கள் கொடுத்திருந்தேன்.

"புத்திசாலிகளின் பிரச்சனை முட்டாள்களிடம் அதனைக் காண்பித்துக் கொண்டே இருப்பது"
"முட்டாள்களின் பிரச்சனை புத்திசாலிகளிடம் அதனைக் காண்பித்துக் கொண்டே இருப்பது"

இந்த இரண்டு கீச்சுக்களும் மேலே குறிப்பிட்ட அவருடைய கீச்சிலிருந்து நிச்சயமாக காப்பியடிக்கப் பட்டவை அல்ல. இந்த ஒரு வரிக்கான விளக்கம் தான் கீழே வரும் நாற்பது வரிகளும்.

இந்த இரண்டையும் ஒரே கீச்சாக எழுத ஆரம்பித்து பின்னர் 140 யின் பிரச்சனையால் இரண்டு தனித் தனி கீச்சுக்கலாக அளித்தேன். (இது ஒரு கூடுதலான தகவல் மட்டுமே)
முதலில் குறிப்பிட்ட அவரது கீச்சையும், பின்னர் குறிப்பிட்டுள்ள என்னுடைய இரண்டு கீச்சுகளையும் படித்து, இவற்றிக்கான விளக்கத்தை படிக்கும் நீங்களே புரிந்து கொள்ளலாம். ( உங்களுக்கு இயல்பாக எழும் உணர்வைப் பொறுத்து ).

இவற்றில் கருத்து வேற்றுமையே இல்லை என்று நினைப்பவர்களுக்கு/நம்புபவர்களுக்கு என் விளக்கம் தேவை :

என் இரண்டாவது கீச்சில், முட்டாள்களின் பிரச்சனை அவர்கள் முட்டாள்த்தனத்தை புத்திசாலிகளிடம் காண்பிப்பது என்கிறேன். (முட்டாள்தனைத்தைக் காட்டுவதால் அல்ல பிரச்சனை. புத்திசாலிகளிடம் காட்டுவதால் தான் பிரச்சனை பிறக்கிறது என்று. ) இதற்கும் அவருடைய கீச்சுக்கும் உள்ள வேற்றுமையை கவனித்தால் தெரியும்.

முதல் கீச்சில், புத்திசாலிகளின் பிரச்சனை முட்டாள்களிடம் அதனைக் காண்பித்துக் கொண்டே இருப்பது என்கிறேன். அவருடைய கீச்சு இதற்கு நேர் எதிர்மாறானது. புத்திசாலிகள் தன புத்திசாதித் தனத்தை காண்பிக்க மாட்டார்கள் என்கிறார்.

இந்த பொருள் வேறுபாடுகளை எல்லாம் மீறி, என் கீச்சின் பிறப்பிடம் அவருடைய கிச்சுத் தான் என்று ஒருவர் சொல்லவும் வாய்ப்புண்டு. அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அப்படிச் சொல்ல உரிமையும் உண்டு.


இதற்கு என்னுடைய நேர்மையான பதில் இதுவே :

நான் அவர்களின் ட்வீட்டைப் படித்திருந்தேன். அதன் பொருளில் கருத்து பரிமாற்றமும் செய்திருந்தேன். எனவே அதனை நான் மறந்திருப்பேன் என்று சொல்ல முடியாது. இருப்பினும் நான் இந்த இரண்டு கீச்சுக்களை எழுதும்பொழுது ஒரு நொடி கூட அந்தக் கீச்சு என் நினைவிற்கு வரவில்லை.

சிந்தித்துப் பார்த்தால், அந்த கீச்சின் தாக்கம்/பாதிப்பு எனக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு. இந்த கருத்து (ஆதரவானதோ/எதிரானதோ) என் மனதில் பதிந்திருக்கலாம் (subconscious ). நிச்சயமாக அப்படித் தான் என்று சொல்ல முடியாது. சுருக்கமாகச் சொன்னால், அவரின் அந்த கீச்சு இல்லை என்றால் என்னுடைய இந்த கீச்சுகள் இருந்திருக்குமா என்றால்.. அது 50 - 5௦. தான். இருந்திருக்கலாம். இல்லாமலும் போயிருக்கலாம்.

இந்த இரண்டு கீச்சுக்கள் அந்த கீச்சின் பொருளிலிருந்து வெகுவாக மாறுபட்டாலும், அந்த கீச்சின் பாதிப்பிலிருந்து வந்திருக்கக் கூடும். முன்பே சொன்னது போல, ஒருவேளை அவர் இந்த கிச்சை எழுதாமல் இருந்திருந்தால் கூட என்னுடைய இந்த கீச்சுக்கள் பிறந்திருக்கக் கூடும்.

ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். எவ்வகையில் நடந்திருந்தாலும் இது வேண்டுமென்றே intentional ஆகச் செய்யப் பட்டது அல்ல.
அப்படி ஒன்று செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

என் கீச்சுக்களை பின்பற்றுபவர்களுக்கு இது நன்கே புரியும். முன்பே சொன்னது போல எனக்கு விவாதங்களில் பெரிய உடன்பாடு இல்லாததால் (குறிப்பாக இணைய விவாதங்களில்) இந்த பதிவை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் என் தரப்பு விளக்கங்களை மட்டும் எழுதியுள்ளதாக நம்புகிறேன்.

Saturday, June 18, 2011

அவன் இல்லை இவன்(பாலா)


அவன் இவன் படத்திற்கு விமர்சனம் எழுதுவதாக ஒரு துளி கூட எண்ணம் இல்லை. ஆனால் இந்த படம் ஒரு வித்தியாசக் காரணத்திற்காக விமர்சனம் எழுத வைக்கிறது. பொதுவாக நாம் விமர்சனம் எழுதக் காரணம், ஏதாவது நல்ல படைப்பு வெளியாகும். அதனை பெரும்பாலானோர் திட்டுவார்கள். நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக (நமக்கு புரிந்துவிட்டது என்பதைக் காட்டிக்கொள்வதற்காகவும் தான்) நாம் அதனைப் பாராட்டி விமர்சிப்போம். இங்கே கதை உல்ட்டா.

அவன் இவன் பொதுவாக மக்களிடைய அதிருப்தியையே ஏற்படுத்தி இருக்கிறது. படத்திற்கு அது தான் தகுந்த பதிலும் கூட. ஆனால் ஒரு வகையினர் இதனை பாராட்டியபடியே இருக்கிறார்கள். வெறும் படமாக அல்லாமல் பாலா படமாகவே. அப்படியாயின் என்ன அர்த்தம்? பாலா என்பவன் எப்படிப் பட்ட இயக்குனர் என்று அவர்களுக்கு அவரது முந்தைய படங்களால் புரியவில்லையா? போதாதற்கு நண்பன் சரவண கார்த்திகேயன் வேறு இப்படியொரு பதிவை எழுதிவிட்டான். நமக்கு கை சும்மா இருக்குமா. அதான் இந்தப் பதிவு.

இளம் இயக்குனர்களில் நான் முழுக்க முழுக்க நம்புவது பாலா மற்றும் செல்வராகவனை மட்டுமே. பருத்திவீரன் எடுத்த அமீர் கூட இல்லை. காரணம் இவர்கள் இருவரும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே பாலாவின் ரசிகனாகவே நான் படம் பார்க்கச் சென்றேன். எதிர்பார்ப்பு சற்று குறைந்திருந்தது. 'நான் கடவுள்' படத்தின் Scriptயில் உள்ள சில சிறிய குறைகள் காரணமாக இருக்கலாம். இருப்பினும் 'நான் கடவுள்' படத்தை நான் வெகுவாகப் பாராட்டவே செய்தேன். பல காரணங்கள். சரி.இப்போது 'அவன் இவன்'க்கு வருவோம்.

ஒழுங்காக போய்கொண்டிருந்த பாலா திடீரென முழு நகைச்சுவை படம் என்றார். பொதுவாக பாலா படங்களிலும் செல்வா படங்களிலும் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். சீரியசான பாடமாக இருந்தாலும் கூட. ஒரு வகையில் கமர்ஷியல் அம்சங்களை சொருகுவதில் இவர்கள் இருவரும் வல்லுனர்கள். ஆனால் அவை அனைத்தும் மிகவும் ரசிக்கும்படியான எதார்த்தமான நகைச்சுவைகள். பிதாமகன் படத்தில் சூர்யா விக்ரமைச் சந்திக்கும் முதல் காட்சியில் சூர்யாவை விக்ரம் பிராண்டியதும் அங்கிருக்கும் போலி சாமியார் கிழவனிடம் போய் சொல்வான். அதற்கு அவன் தன் கையில் இருக்கும் கட்டு போட்ட காயத்தை காண்பித்து முகத்தைத் திருப்பிக்கொள்வான். இது தான் பாலா டச். ஆனால் அவன் இவன் படத்தில் என்ன நடக்கிறது. நகைச்சுவை என்ற பெயரில் வெறும் கவிச்சி. ஒரு காட்சியில் மது அருந்திக்கொண்டிருக்கும் விஷாலைப் பார்த்து அம்பிகா சொல்வார், 'எல்லாத்தையும் தீர்த்துடாத. அம்மாவுக்கு ஒரு கட்டிங் வை. வர வர சரக்கடிக்காம தூக்கம் வர மாட்டேங்குது'. மற்றொரு காட்சியில் 'அவனுக்கு அவன் குஞ்சு மணிய புடிச்சு ஒழுங்கா ஒன்னுக்கு கூடப் போகத் தெரியாது'. இந்த மாதிரியான வசனங்களால் முழுக்க முழுக்க நிரம்பியிருக்கிறது முதல் பாதி. இதுக்குப் பேர் தான் நகைச்சுவையா? இதற்கு எதுக்கு அய்யா பாலாவும் எஸ்.ரா வும் தேவை. இதனை எங்களால் வேறு படங்களில் பார்க்க முடியாதா? சிரிப்பு வந்தால் கூட பரவாயில்லை. சிரிப்பும் வராதா வக்கிர வசன்கங்கள். இப்படி இருந்தால் உடனே அது எதார்த்தம் ஆகிவிடுமா? எதார்த்தம் என்பதை முழுக்க முழுக்க தவறாகப் பயன்படுத்துவது இது தான்.

பாலாவின் நகைச்சுவை தரமே முற்றிலும் இல்லாமல் நகைச்சுவையை திணிக்க முயற்சித்து சொதப்பியிருக்கிறார்கள். இங்கே இரண்டு விஷயங்களைக் தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது.

முதலாவது : மலைவாழ் இனத்தவரின் இயல்பு வாழ்வில் நகைச்சுவை இப்படித் தான் இருக்கும் என்று சொல்லலாம். இருக்கட்டும். மலைவாழ் இனத்தின் வாழ்வை சார்ந்து கதை நகர்த்த முடிவு செய்தவன் அதனை சுவாரஸ்யமாகக் கொடுக்க முடியும் என்ற அடிப்படையில் செய்திருக்க வேண்டும். அது தான் எதார்த்தம் என்று எண்ணிப் பார்த்து எந்த ரசிகனாலும் ஒரு படைப்பை ரசிக்க முடியாது.

அடுத்தது, நகைச்சுவையில் புது வகை. சரி தான். அதற்காகவும் ரசித்துவிட முடியுமா? உணவு புது வகையாய் இருந்தால் என்ன, அதன் பெயர் கவர்ச்சியாக இருந்தால் என்ன. சாப்பிட நன்றாக இருக்க வேண்டுமே. புது வகை நகைச்சுவை என்ற ஒரு Fact மட்டும் வைத்துக் கொண்டு பாராட்ட முடியாது. என் நண்பன் ஒருவன் 12B படமும், விருமாண்டி படமும் தரத்தில் சமம் என்பான். ஏனென்றால் இந்த இரண்டு படங்களிலும் தத்தம் இரண்டு கதைகள் சொல்கிறார்கள் என்பான். Factஐ வைத்து விமர்சித்தால் இப்படித் தான் இருக்கும்.

படத்தில் முக்கால்வாசி அளவிலான இந்த நகைச்சுவை முயற்சிகள் ஆக்கிரமிக்கின்றன. சிரிக்கவைக்கும் ஓரிரு நகைச்சுவைகளும் (Liarரை Lawyer என்று புரிந்துகொள்ளும் போலிஸ்) சந்தானம் வகைக் காமிடி. சரி இவை தாம் நன்றாக இல்லை என்று பார்த்தால், பொதுவாக பாலாவிடம் எதிர்பார்க்கும் எதுவுமே இங்கு நடக்கவில்லை. காட்சியமைப்பு, கதைக்களம், இயல்பான நடிப்பு என்று எதுவுமே இதில் இருப்பதாகத் தெரியவில்லை.

விஷால் நடிப்பு மட்டுமே இதில் பாராட்டத் தகுந்தது. அதையும் சில இடங்களில் யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த கான்ஸ்டபிள் கதாநாயகி ஓவர் ஆக்டிங். அது சரி, அவர் வரும் காட்சிகள் அனைத்துமே செயற்கையானவை அதில் அவரது நடிப்பை எங்கே குறை சொல்வது? பாலா படங்களில், அவர் ஹீரோயின்களை சித்திரவதை

செய்துவிடுவார் என்று விளையாட்டாகச் சொல்வோம் (நான் கடவுள் பூஜா). அது படத்திற்கு அவ்வளவு தேவையானதாக இருக்கும். இங்கேயும் ஒரு ஹீரோயினை எதாவது பண்ண வேண்டுமென்று நினைத்துவிட்டார் போலும். குட்டிக்கரணம் அடிக்க வைத்து சித்திரவதை செய்கிறார். நம்மையும்.

இப்படியே முல்லாவாசிப் படம் முடிந்துவிட, கடைசியில் திடீரென மாறுகிறது. எப்படியாவது படத்தை முடிக்க வேண்டுமே. அதற்காக கடைசி அரை மணி நேரம் நன்றாக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். அதுவும் கொடுமை. கடைசி அரைமணி நேரம் ஒரிஜினல் பாலா படம் என்று யாரவது சொன்னால் அது தான் பாலாவை மேலும் அசிங்கப் படுத்துவது.

நண்பன் ஒருவன் கூறுவான் 'பாலாவுக்கு படத்தின் முடிவில் எவனையாவது கொல்ல வேண்டும். அப்ப தான் நிம்மதி' என்று. இது எல்லா பாலா படங்களிலும் நடந்ததுண்டு. இருப்பினும் நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். காரணம் இதுவரை அவை வேண்டுமென்றே இல்லாமல் கதைக்குத் தேவையானதாகவோ அல்லது கதையே ஆனாதுமாகவோ இருக்கும். ஆனால் இங்கே. திடீரென ஒரு பிரச்சனையை பிறக்கிறது, திடீரென வில்லன் . திடீரென கொலை. திடீரென பழிவாங்குதல். இந்தப் படம் பொறுத்தவரை அந்த நண்பனின் கமெண்ட் முற்றிலும் உண்மை.

இந்த காட்சிகளின் வக்கிரமும் முழுக்க முழுக்க செயற்கையானவை. தேவையற்றவை. பிதாமகன் படத்தில் விக்ரம் வில்லனின் தொண்டையைக் கடிப்பார். அந்த காட்சியில் வலிமை உண்டு. விக்ரமின் கதாப்பாத்திரம் படம் முழுக்க அப்படிக் காட்சியமைக்கப் பட்டிருக்கும். சூர்யா மீதான நட்பும் வலியுறுத்தப் பட்டிருக்கும். அதற்கு அவ்வகை வக்கிரம் சரி. ஆனால் இங்கே கொலையும் தேவை இல்லை, வக்கிரமும் தேவை இல்லை. எல்லாமே செயற்கை.

இது பாலாவின் திறனை மிகவும் சந்தேகத்திற்கு ஆட்படுத்தும் படைப்பு. இதற்கு முந்தைய பாலா படங்கள் அனைத்தையும் மிகவும் ரசித்தேன். ஆனால் இப்பொழுது உண்மையில் அவரின் காலம் முடிந்துவிட்டதா என்ற எண்ணம் கூடத் தோன்றுகிறது. நிச்சயம் 'அவன் இவன்'க்கு முன்பிருந்த அவனில்லை இவன். .பாலா இனி அவர் பாணியிலேயே படம் எடுத்தால் நல்ல படைப்புகள் கொடுக்க வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்.

'அவன் இவன்' பாலாவின் பெயரில் படிந்த தூசி.


Tuesday, December 7, 2010

நந்தலாலா : மிஷ்கின் -> ராஜா


கிட்டத்தட்ட அனைவரும் நந்தாலாவைப் பற்றி பேசி முடித்துவிட்ட சமயம், நான் இப்பொழுது தான் எழுதத் துவங்குகிறேன். பொதுவாக பதிவுகள் எழுத்தத் தயங்கும் ஒரே காரணம்... சோம்பேறித்தனம் தான் வேறென்ன. அதனையும் மீறி இதனை எழுதத் துவங்கும் ஒரே காரணம்... நன்றியுணர்வு தான் வேறென்ன. ஒரு பார்வையாளனாக வெகு நாட்கள் கழித்து நல்ல படைப்பொன்றை ரசித்தமைக்கு இருக்கும் உணர்வே.

நந்தலாலா படம் பார்ப்பதற்கு முன்னர் நமக்கே தெரியாமல் நம் மனதிற்குள் ஒளிந்திருக்கும் சினிமாவிற்கான கோட்பாடுகள் அனைத்தையும் அழித்திட வேண்டும். குறைந்தபட்சம் தமிழ் சினிமாவிற்கான கோட்பாடுகளை. அதாவது படத்தின் முதல் காட்சிகள் இப்படி இருக்க வேண்டும், படத்தின் கதைக்களன் இவ்வாறு, பத்து நிமிடத்தில் கதை இவ்வளவு நகர்ந்திருக்க வேண்டும் போன்ற முன்முடிவுகளை மறந்திடவும்.

படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை மிகத்துல்லியமாக, நிதானமாக, எதார்த்தமாக காட்சிகள் நகர்கின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சுவாரஸ்யத்திற்காக ஒரு காட்சி கூட சேர்க்கப் பட்டதாகத் தெரியவில்லை. தாய்மையைச் சொல்லும் கதை என்பதோ, பயணத்தை மையமாகக் கொண்ட கதை என்பதோ இதற்கு ஒரு கவர்ச்சி சொல்லாடலாக இருக்கலாம். உண்மையில் இது ஒரு அனுபவம். வாழ்க்கையைப் போல. படம் பாதி நகர்கையிலே பார்க்கும் சிலர் ..'என்ன தான் சொல்ல வர்றாங்க?' என்று முனகும் சத்தங்கள் கேட்டன. வாழ்க்கை செல்லும் வேகத்தை, திசையை, இயல்பை, மாறுதல்களைப் பார்த்து அவர்கள் இயற்கையை வினவும் கேள்வி தான் அது.

கடைசி பத்து நிமிடங்கள் கதை என்று சொல்லிக்கொள்ள உதவலாம். படம் முழுக்க நடக்கும் பயணமே கரு என்று சொல்ல உதவுகிறது. படத்தின் பயணத்தில் ஒட்டுமொத்தக் காட்சிகளைச் சேர்த்தால் அதில் சொல்ல முயல்வது பிரம்மிப்பூட்டுகிறது. காரணம் ஒன்று தான். எதார்த்தம் பிரம்மிப்பூட்டும் நிலையில் தான் தமிழ் சினிமாவும் அதன் ரசிகர்களும் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் இதில் நம் சமூகம் பற்றிய உணர்வு, மனித குணங்களின் இயல்பு, மனித நேயத்தின் அழுத்தம், தனிமையின் உச்சம் என்று அனைத்துமே மிகச் சுலபமாக ஆனால் அழுத்தமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. வாழ்க்கையைப் போல எதார்த்தமான பயணம் என்றால் அதனை வாழ்க்கையிலே பார்த்துக்கொள்வேன், சினிமா எதற்கு என்று கேட்பவர்களுக்காக இது.

போக இவை அனைத்தையும் அவரின் தனி பாணியிலே நகர்த்திச் செல்கிறார் மிஷ்கின். விரலை சுவரில் உரசிக்கொண்டே நடப்பது (பின்னர் தாயை தூக்கிக்கொண்டு நடக்கையில் தாயின் கால் விரல்கள் உரசுவதும்), பிச்சையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அதனை மிரட்டி வாங்குவது, சில்லறையை மட்டுமே பணம் என்று நம்பும் அறிவு, கடவுளின் சிலைக்குரிய விளக்குகளை எடுத்துச் செல்வது, ஏன்...முக்கால்வாசி படத்தில் போட்டிருக்கும் பேண்டை கையில் பிடித்துக்கொண்டே நடப்பது உட்பட அனைத்துமே எளிமையான எதார்த்த கவர்ச்சிகள். மிஸ்கின் உண்மையாகவே நடித்திருக்கிறார்.

- அங்க பார்.அழுது அழுது சிரிச்சுருச்சு..
- இது உங்க அம்மான்னு பட்டி சொன்னாளா? இது உங்க பாட்டின்னு யார் சொன்னா? அம்மா சொன்னாளா?
- 'ஃபோட்டோ எப்படி முத்தம் கொடுக்கும்?' 'நீ மட்டும் ஃபோட்டோக்கு முத்தம் கொடுக்குற?'

போன்ற வசன்கங்கள் நிஜமாக ரசிக்க வைக்கின்றன.

நந்தலாலாவின் இசையை பேசாவிட்டால் அது 'நந்த'வைப் பற்றி மட்டும் பேசியதுபோலாகிவிடும். நந்தலாலா என்ற வார்த்தையை எழுதிய அடுத்த வினாடி இளையராஜா என்ற பெயர் தான் எழுதினேன் என்றார் மிஸ்கின்(படத்தின் டைட்டில் கார்டிலும் அவ்வாறே), உண்மையில் இளையராஜா என்ற வார்த்தைக்கு அடுத்து நந்தலாலா என எழுதியிருந்தாலும் தப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது இசை. இசை என்ற வார்த்தைக்கு இங்கு முழு அர்த்தம் 'பின்னணி இசை' என்றே கொள்ளலாம். 'ராஜாவின் இசை இல்லாமல் படமே இல்லை' என்பது பொய் தான். அனாலும் அதனை உண்மையைப் போல சொல்லத் தூண்டும் இசை. அதுவே அதன் சிறப்பு. உண்மையில் கதை மிஷ்கின் என்றால் கதாநாயகன் ராஜா எனலாம். படம் நகர்த்திச் செல்லும் பயணம், உணர்த்தப்படும் வலிமை இவற்றினுடன் ராஜாவின் பின்னணி இசை உண்மையான உணர்வுக்கு அருகே நகர்த்திச் செல்கிறது. இன்னும் சில காட்சிகளில் அமைதி அழகு.நந்தலாலாவைப் பொறுத்தவரை வசனம் பேசுகிறது. இசை வழியுறுத்துகிறது. அமைதி கற்பிக்கிறது.

மிஷ்கின் தனது தாயை சந்திக்கும்போது வரும் பாடல் முற்றிலும் ஏமாற்றமே. ராஜா ரசிகனாக ஒருவனின் எதிர்பார்ப்பு சேதுவின் 'வார்த்தை தவறிவிட்டாய்' அளவிற்கு இருக்கும். படத்தின் உணர்வு நிற்கும் இடம் கிட்டத்தட்ட அவ்வளவிலான ஒரு பாடலை வேண்டுகிறது. ஆனால் கிட்டவில்லை. பின்னணி இசைக்காக மன்னிக்கலாம். பிதாமகன் படத்தின் பின்னணி இசையை மிஞ்சுமா என்ற ஆவலோடு சென்றேன். 'கிட்டத்தட்ட' என்ற பதில் கொடுத்த ராஜாவுக்கு நன்றி.

தாய்மை பற்றிய படம்/ சோகப் படம்/ அழுகை தரும் படம் என்று வகைப்படுத்துவோர்...அழுகை தருவதை நல்ல படத்திற்கான அளவுகோலாகக் கொள்வோர் போன்றோர் மாறக் கிடைத்த வாய்ப்பு வேஸ்ட். படம் நகர்த்திச் செல்லும் பயணத்தின் அர்த்தம் புரிந்தால் இந்த வகைகள் எதிலும் அடங்காத சிறந்த படைப்பு நந்தலாலா. நன்றி மிஷ்கின்.

Monday, September 27, 2010

தாய்மொழி X தமிழ்

நான் எப்பொழுதும் தமிழில் எழுதுவதைக்கண்டு நான் தமிழ் வெறியன் என்றும், ஆங்கிலத்தை வெறுப்பவன் என்பது போலவும் சிலர் நினைகிறார்கள். கேள்வியும் கேட்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு எனது ஒரே பதில்.

பொதுவாகவே தாய்மொழி, தாய்நாடு போன்ற Buildupகள் என்னிடம் அதிகம் கிடையாது (ஒரு சில முட்டாள்தனம் நீங்கிய எண்ணங்கள் தவிற. அதைப் பற்றி பின்னதொரு பதிவில் பேசுவோம்). தமிழ் மொழிக் காரணாக பிறந்ததால் ‘தமிழ் தமிழ்’ என்று கோஷம் போடவேண்டாம். இதுவே என் கையில் இல்லாத என் பிறப்பு ஒரு வேலை பிரான்ஸ் நாட்டில் இருந்திருந்தால், பிரெஞ்சு கோஷம் போடா வேண்டுமா? இதற்கு பெயர் தான் பற்றா?

தமிழ் மொழி எவ்வளவு சிறப்பு வாய்ந்த மொழி என்று அனைவருக்கும் (குறைந்தபட்சம் அனைத்து தமிழர்க்கும் ) தெரியும். அப்படியொரு மொழியை கண்டு/கற்று வியக்கிறேன். அவ்வளவு தான். இன்றும் அதனைப் படிக்க படிக்க வியப்பாகத் தான் உள்ளது. இதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்பு. தமிழை நான் படிப்பதும்/வியப்பதும்/நேசிப்பதும் கூட, அதன் சிறப்பினால் தான், தாய்மொழி என்பதால் அல்ல. நான் வேற்றுமொழிக் காரணாக இருந்து தமிழ் கற்றிருந்தாலும் இதே நிலை தான்.

என் கையில் இல்லாத என் பிறப்பு தமிழ் மொழிக்குறிதாக அமைந்தது ஒரு சந்தோசம். காரணம் என்னால் தமிழ் படிக்க, அதன் சிறப்புகளை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு அது. அவ்வளவு தான். தமிழில் பேசுவதையோ எழுதிவதையோ நான் எக்கணமும் பெருமையாக நினைத்ததில்லை. தமிழனாக இல்லாமல்போயிருந்தால் இதனை செய்திருக்கப் போவதில்லை. அதன்பின் இதில் என்ன பெருமை?

சரி. தமிழனாகப் பிறந்து தமிழ் பேசுவதில் என்ன பெருமை? அது ஒரு சாதாரண விஷயம். தமிழர்களில் பலர் அந்நிய மொழியை பேசுவதில் பெருமை அடைகிறார்கள், எந்தவித அர்த்தமும் இல்லாமல். அவர்கள் செய்வது கேவலம் என்பதால் நாம் செய்வது சாதனை ஆகிவிடுமா? தமிழில் பேசுவது நமக்கு இயற்கை குடுத்த ஒன்று. அதனை பெருமை என்று சொல்பவன் யார் தெரியுமா? அவன் கூட்டத்தைச் சேர்ந்த மற்றவர்கள் செய்யும் பிழையை வைத்துக்கொண்டு தன் சாதரனத்தனத்தை விளம்பரப்படுத்த நினைப்பவன். எனவே, தமிழ் ஒரு சிறந்த மொழி என்று மட்டும் தான் சொல்வேனே தவிர, தமிழில் பேசுவதை பெருமையாக நினைப்பவன் அல்லன் நான்.

அடுத்தது நம் காட்டு ராஜா 'ஆங்கிலத்திற்கு' போவோம். தமிழில் பேசுவதையே பெருமையாக நினைக்காத நான் எப்படி ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைப்பேன்? நிச்சயம் இல்லை. தனது தேவைக்கோ, வசதிக்கோ, செளகர்யத்திற்கோ ஆங்கிலம் பேசும் தமிழர்களுக்கு நான் என்றும் எதிர்ப்பு இல்லை. ஆனால் தனக்கு வாய்த்த சிறப்புகள் தெரியாமல், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என்று நினைக்கும் யோக்கியர்கள் பல. அதிலும் தமிழர்கள் இதில் கொஞ்சம் தலை தூக்கி நிற்பவர்கள். ஆங்கிலம் பேசுவதில் அப்படி என்ன பெருமை இருக்கிறதென்று எனக்கு புரியவில்லை. தமிழ் பேசுவதை கேவலம் என்று நினைத்து ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே என் எதிர்ப்பு. கவனிக்கவும் - இது தாய்மொழிப் பற்று அல்ல. அவ்வகையினரின் கேவலமான சித்தாந்தம் மட்டுமே காரணம். பின்னொருநாள் தமிழ் மொழி உலகையே ஆட்சி செய்தாலும் இம்மாதிரி ஆட்கள் மட்டும் திருந்தவே மாட்டார்கள்.

கேள்விகள்

என்னிடம் பரவலாக கேக்கப் படும் கேள்விகளில் ஒன்று - நீங்கள் கமல் ரசிகரா? இளையராஜா ரசிகரா? என்று :

எளிதாகப் புரிந்துகொள்பவர்களுக்கு ஏற்றாற்போல் சொன்னால்,
நான் யாருக்கும் ரசிகன் அல்ல. எனக்குள் இருக்கும் ரசனைக்கு மட்டுமே நான் ரசிகன். காசு குடுத்து படம் பார்ப்பவன் நான், என் தேவைக்கும் ரசனைக்கும் முக்கியத்துவம் குடுக்காமல், நான் ஏன் கமலுக்கும் இளையராஜாவுக்கும் முக்கியத்துவம் குடுக்க வேண்டும்?

கமலின் திறமை சாதாரண தமிழ் சினிமா இயக்குனர்களிடமிருந்து மிக உயர்ந்து நிற்கிறது. அதே போல் இளையராஜா. நான் இதுவரை கண்டத்தில் இவர்களின் தளத்தில் இவர்களே ராஜா. மட்டமான நமது மக்கள் ரசனைக்கு விருந்தளிக்கும் சுயநலம் மறுத்து நல்ல படைப்பாளிக்கும் தைரியங்கள் கொண்டவர்கள். இது தான் என் கருத்து.

மேல்தளம் சற்று பலவீனம் அடைந்தவர்க்கு ஏற்றாற்போல் சொன்னால்,

ஒருவரின் படைப்பைப் பார்த்து அதனால் Impress ஆகி, உடனே அவனுக்கு ரசிகன் ஆகிவிட வேண்டும். அதன்பின் அவனது படைப்புகள் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் அதை ரசிக்க வேண்டும் என்பது தான் 'ரசிகன்' என்பதற்கு உங்களது அர்த்தம் என்றால், மன்னிக்கவும் நான் உங்கள் அளவுக்கு புத்திசாலி இல்லை. இப்படிப்பட்ட புத்திசாளிகளுக்குப் பெயர் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்பவர்கள்.என்னைப் பொறுத்த வரையில் ரசிகன் என்பவன் ஒரு திறமைசாலியின் படைப்பு , பிரமிக்க வைப்பின், ஊரே அதை எதிர்த்தாலும் அது நல்ல படைப்பு என்பதில் நிச்சயமாக இருக்க வேண்டும் (எ.கா : ஹேராம்). அப்படியொரு திறமைசாலியின் படைப்பு தரமற்று இருந்து அதை அனைவரும் போற்றிப் புகழ்ந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் (எ.கா: PKS)
***********************************************************************************************

அடுத்த கேள்வி: உங்களின் பெரும்பாலான கருத்துக்கள் ஏன் விவாதத்திற்கு உட்பட்டவையாகவே உள்ளது?

அவ்வாறு எண்ணுபவர்களுக்கு நான் கொடுக்கும் பதில் ஒன்று தான் :
சிந்தனைக்கு உட்பட்ட அனைத்து விஷயங்களும் விவாத்திற்கு உட்பட்டவை தாம். But not vice versa.

Sunday, July 11, 2010

VÖIcÉ őf ĜōĐ


Whenever my friends talk about the strengths of ‘our legend’ over
others who travels in the same boat, my reply for them is always same:
‘Your points are illogical. Remember that you do compare God with
fellow humans’ :). Yes. I always address our legend as The God of
Music who is none other than Maestro Ilayaraja.

Forgetting his composing of music for few moments, I just thought
about his singing. Ilayaraja, the singer has been left unnoticed or
underrated in my opinion. The reason could be Singer Ilayaraja has
been over shadowed by the composer inside him. I would say that the
songs which have been sung by him reaches the depth of the song’s
emotion and would not be the same if sung by any other. His voice
gives that special and unique feeling in the listener’s mind making
him to drench into the mood of the song, especially the sad ones. I
even enjoy the vocal harmony by him which commences most of the songs
under this category.
In short, I would name that as Bio-magnetic Voice.

I heard from many stating that his voice is not a smoothest one. My
reply is just this: The same way, a good movie struggles to prove its
quality when competing with a commercial one, Ilayaraja’s voice need
good listeners to prove its quality and strengthJ. We must have come
across hundreds of sweet and soft voices, but according to me, this is
one voice which is Soul Stirring.

I find it very difficult to list out the best ones of his voice. I
would recommend you to listen to the below ones to know the strength
of his voice. I failed to restrict them to the count of 10…. What do
you feel on the below list of 20?


1. Then Pandi (Nayagan)
2. Thendral Vanthu (Avatharam)
3. Vaarthai Thavarivittai (Sethu)
4. Enge Sellum (Sethu)
5. Sorgame Endralum (Vooru vittu Vooru vanthu)
6. Engengo Kaagal Sellum (Nandha)
7. Naan thedum (Dharma pathini)
8. Thulli Ezhunthathu Paattu (Geethanjali)
9. Paravayin Kootil (Tamizh MA)
10. Ada Veetukku Veetukku (Kizhakku Vaasal)
11. Un Kuthama (Azhagi)
12. Ariyaatha Vayasu (Paruthi Veeran)
13. Janani Janani (Thaai Mugambigai)
14. Aaru Athu Aalam Illa (Muthal Vasantham)
15. Thediyathu (Mahanathi)
16. Raja Rajathi (Agni Natchatram)
17. Panam Mattum (Solla marantha kadhai)
18. Poo Malaye (Pagal Nilavu)
19. Appan Endrum (Guna)
20. Yaarathu (Pithamagan)