Monday, October 3, 2011

புத்திசாலித்தனத்தின் முட்டாள்தனம்


பொதுவாகவே நான் ட்விட்டரில் அதிகம் விவாதங்களில் கலந்துகொள்ளாமல் தனிக் கீச்சுகள் மட்டும் எழுதி விலகி விடுவது வழக்கம். விவாதங்கள், சண்டைகள் போன்றவை மீது எனக்குள்ள அதீத வெறுப்பே காரணம்.. அது ஒரு பலவீனமும் கூட.

விஷயத்திற்கு வருகிறேன். இங்கே நடந்திருப்பது ஒரு விளையாட்டான(???) ஒன்று என்றாலும், இது பல குழப்பங்களை உண்டாக்குவதால், இதற்கு விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

கடந்த செப் 9 ஆம் தேதி ஒருவர் கீச்சியிருந்தது :

"புத்திசாலிகள் புத்திசாலிதனத்தை வெளிக்காட்டிக் கொண்டே இருக்க மாட்டார்கள் முட்டாள்கள் முட்டாள்தனத்தை காட்டிக்கொண்டே இருப்பது போல"

இந்த கிச்சை நான் படித்திருந்தேன். முக்கியமாக இதனைக் கீச்சியவருடன் இந்த கீச்சின் பொருளை வைத்தே சில கருத்து பரிமாற்றங்கள் நடந்தது. இதுவும் உண்மை.

நேற்று ( அக் 3) நான் இரண்டு கீச்சுக்கள் கொடுத்திருந்தேன்.

"புத்திசாலிகளின் பிரச்சனை முட்டாள்களிடம் அதனைக் காண்பித்துக் கொண்டே இருப்பது"
"முட்டாள்களின் பிரச்சனை புத்திசாலிகளிடம் அதனைக் காண்பித்துக் கொண்டே இருப்பது"

இந்த இரண்டு கீச்சுக்களும் மேலே குறிப்பிட்ட அவருடைய கீச்சிலிருந்து நிச்சயமாக காப்பியடிக்கப் பட்டவை அல்ல. இந்த ஒரு வரிக்கான விளக்கம் தான் கீழே வரும் நாற்பது வரிகளும்.

இந்த இரண்டையும் ஒரே கீச்சாக எழுத ஆரம்பித்து பின்னர் 140 யின் பிரச்சனையால் இரண்டு தனித் தனி கீச்சுக்கலாக அளித்தேன். (இது ஒரு கூடுதலான தகவல் மட்டுமே)
முதலில் குறிப்பிட்ட அவரது கீச்சையும், பின்னர் குறிப்பிட்டுள்ள என்னுடைய இரண்டு கீச்சுகளையும் படித்து, இவற்றிக்கான விளக்கத்தை படிக்கும் நீங்களே புரிந்து கொள்ளலாம். ( உங்களுக்கு இயல்பாக எழும் உணர்வைப் பொறுத்து ).

இவற்றில் கருத்து வேற்றுமையே இல்லை என்று நினைப்பவர்களுக்கு/நம்புபவர்களுக்கு என் விளக்கம் தேவை :

என் இரண்டாவது கீச்சில், முட்டாள்களின் பிரச்சனை அவர்கள் முட்டாள்த்தனத்தை புத்திசாலிகளிடம் காண்பிப்பது என்கிறேன். (முட்டாள்தனைத்தைக் காட்டுவதால் அல்ல பிரச்சனை. புத்திசாலிகளிடம் காட்டுவதால் தான் பிரச்சனை பிறக்கிறது என்று. ) இதற்கும் அவருடைய கீச்சுக்கும் உள்ள வேற்றுமையை கவனித்தால் தெரியும்.

முதல் கீச்சில், புத்திசாலிகளின் பிரச்சனை முட்டாள்களிடம் அதனைக் காண்பித்துக் கொண்டே இருப்பது என்கிறேன். அவருடைய கீச்சு இதற்கு நேர் எதிர்மாறானது. புத்திசாலிகள் தன புத்திசாதித் தனத்தை காண்பிக்க மாட்டார்கள் என்கிறார்.

இந்த பொருள் வேறுபாடுகளை எல்லாம் மீறி, என் கீச்சின் பிறப்பிடம் அவருடைய கிச்சுத் தான் என்று ஒருவர் சொல்லவும் வாய்ப்புண்டு. அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அப்படிச் சொல்ல உரிமையும் உண்டு.


இதற்கு என்னுடைய நேர்மையான பதில் இதுவே :

நான் அவர்களின் ட்வீட்டைப் படித்திருந்தேன். அதன் பொருளில் கருத்து பரிமாற்றமும் செய்திருந்தேன். எனவே அதனை நான் மறந்திருப்பேன் என்று சொல்ல முடியாது. இருப்பினும் நான் இந்த இரண்டு கீச்சுக்களை எழுதும்பொழுது ஒரு நொடி கூட அந்தக் கீச்சு என் நினைவிற்கு வரவில்லை.

சிந்தித்துப் பார்த்தால், அந்த கீச்சின் தாக்கம்/பாதிப்பு எனக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு. இந்த கருத்து (ஆதரவானதோ/எதிரானதோ) என் மனதில் பதிந்திருக்கலாம் (subconscious ). நிச்சயமாக அப்படித் தான் என்று சொல்ல முடியாது. சுருக்கமாகச் சொன்னால், அவரின் அந்த கீச்சு இல்லை என்றால் என்னுடைய இந்த கீச்சுகள் இருந்திருக்குமா என்றால்.. அது 50 - 5௦. தான். இருந்திருக்கலாம். இல்லாமலும் போயிருக்கலாம்.

இந்த இரண்டு கீச்சுக்கள் அந்த கீச்சின் பொருளிலிருந்து வெகுவாக மாறுபட்டாலும், அந்த கீச்சின் பாதிப்பிலிருந்து வந்திருக்கக் கூடும். முன்பே சொன்னது போல, ஒருவேளை அவர் இந்த கிச்சை எழுதாமல் இருந்திருந்தால் கூட என்னுடைய இந்த கீச்சுக்கள் பிறந்திருக்கக் கூடும்.

ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். எவ்வகையில் நடந்திருந்தாலும் இது வேண்டுமென்றே intentional ஆகச் செய்யப் பட்டது அல்ல.
அப்படி ஒன்று செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

என் கீச்சுக்களை பின்பற்றுபவர்களுக்கு இது நன்கே புரியும். முன்பே சொன்னது போல எனக்கு விவாதங்களில் பெரிய உடன்பாடு இல்லாததால் (குறிப்பாக இணைய விவாதங்களில்) இந்த பதிவை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் என் தரப்பு விளக்கங்களை மட்டும் எழுதியுள்ளதாக நம்புகிறேன்.